- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
அண்டத்தில் சிக்கலான பொருட்களில் மூளையும் ஒன்று. மூளையைப் பற்றி பல கட்டுக்கதைகள் மக்களிடையே பரவி இருக்கின்றன. குறிப்பிட்ட வயதிற்கு பின் மூளை மாறாது என்று நினைத்துக் கொண்டிருந்தோம். அதுபோல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த முடியாது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், மூளையால் தன்னையே மாற்றி அமைத்துக் கொள்ளமுடியும் என்று நரம்பியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். மூளை தன்னையே மாற்றிக்கொள்ளும் தன்மையை ஆங்கிலத்தில் neuroplasticity (நரம்பியல் உரு மாறும் தன்மை) என்று அழைக்கிறார்கள். எடுத்துக்காட்டாக,கண் பார்வை பாதிக்கப்பட்டால், மூளையில் கண் பார்வையை நிர்வகிக்கும் பகுதியை ‘கேட்கும் உணர்ச்சி’ போன்ற பிற புலன்கள் பயன்படுத்திக் கொள்ளும். அப்படி பயன்படுத்தும் போது, இயல்பான அளவை விட கேட்கும் திறன் அதிகரித்து இருக்கும்.
மருத்துவரும் உளவியலாளருமான Norman Doidge நரம்பியல் உரு மாறும் தன்மையைப் பற்றி ‘The Brain That Changes Itself: Stories of Personal Triumph from the Frontiers of Brain Science’என்ற புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். இந்த புத்தகத்தில் நரம்பியலாளர்கள் எப்படி நரம்பியல் உரு மாறும் தன்மையை பயன்படுத்தி நோயாளிகளின் மூளை தொடர்புடைய நோய்களை குணப்படுத்துகிறார்கள் என்று விவரித்துள்ளார். நரம்பியல் உரு மாறும் தன்மையின் மூலம் நோயாளிகள் தங்களின் மூளை தொடர்புடைய சிக்கல்களில் இருந்து மீண்டு வருவது பிரமிக்க வைக்கிறது.
![]() |
(மூளை - பட உதவி - Pixabay) |
ஒரு ஆராய்ச்சியில் Micheal Merzenich என்னும் நரம்பியலாளர் குரங்கின் கையில் இருக்கும் median நரம்பை வெட்டி விடுகிறார். Median நரம்பு கையின் நடு பகுதியை உணர உதவுகிறது. அது போல், radial மற்றும் ulnar நரம்புகள் கையின் பக்கவாட்டு பகுதிகளை உணர உதவுகின்றன. Median நரம்பை வெட்டி இரண்டு மாதங்களுக்கு பின்,மூளையில் இருக்கும் அந்த மூன்று நரம்பு பகுதிகளையும் சோதித்து பார்த்தார். குரங்கு கையின் நடுப்பகுதியை தொட்ட போது, ஏற்கனவே எதிர்பார்த்த படி மூளையில் இருக்கும் median நரம்பு பகுதியில் எந்த வித செயல்பாடும் தெரியவில்லை. ஆனால்,குரங்கு கையின் பக்கவாட்டு பகுதிகளை தடவி கொடுத்த போது மூளையில் median நரம்பு பகுதியில் செயல்பாடு இருந்ததை கண்டுபிடித்தார். இதன் மூலம் radial நரம்பும் ulnar நரம்பும் வெட்டப்பட்ட median நரம்பு பகுதியை பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கியதை உறுதிபடுத்தினார். இது மூளை தன்னையே மாற்றி அமைத்துக் கொள்வதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
மரபணு மாற்றத்தால் விழித்திரை அணுக்கள் (retinal cells) இறந்து, அதனால் பார்வை இழந்த பெண்மணி ஒருவரைப் பற்றி இந்த புத்தகத்தில் விளக்கி இருக்கிறார் மருத்துவர் Doidge. பார்வை இழந்த பின், Kurzweil Educational Systemவழங்கும் ஒரு கணினி நிரலின் (program) மூலம் ஒலி புத்தகங்களை (audio books) படிக்க தொடங்கினார் அந்தப் பெண்மணி. அவரால் ஒரு மணித் துளியில் 340 சொற்களை கேட்க முடிந்தது. அது மட்டும் இல்லாமல்,ஒரே நாளில் மூன்று புதினங்களை படிக்கும் அளவிற்கு அவரின் கேட்கும் திறன் அதிகரித்தது. மூளையில் கண் பார்வையை செயல்படுத்தும் பகுதியான visual cortex மரபணு மாற்றத்தால் செயல்படுவதை நிறுத்திக் கொண்ட பிறகு, அந்தப் பகுதியை கேட்கும் திறனை செயல்படுத்துவதற்கு மூளை கூடுதலாக பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கியது. அதனாலேயே அந்தப் பெண்மணியால் வேகமாக ஒலி புத்தகங்களை படிக்க முடிந்தது என்று மருத்துவர் Doidge விளக்குகிறார்.
![]() |
(The Brain That Changes Itself நூலின் அட்டை) |
ஜெண்டாமைசின் ஆண்டிபயாடிக் மருந்தை அதிகம் உட்கொண்டதால் சமநிலை உணர்வு (sense of balance) பாதிக்கப்பட்ட பெண்மணி பற்றியும் புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார் மருத்துவர் Doidge. அதிகப்படியான ஜெண்டாமைசின் அவரின் காதுக்குள் இருக்கும் vestibular apparatus என்னும் அமைப்பை சேதப்படுத்திவிட்டது. Vestibular apparatus தான் நாம் கீழே விழாமல் நிற்பதற்கும் நடப்பதற்கும் ஒரு சமநிலை உணர்வை தரும் அமைப்பாகும். அந்த அமைப்பு பாதிக்கப்பட்டதால், அந்தப் பெண்மணிக்கு, தான் கீழே விழுவதைப் போன்ற ஒரு உணர்ச்சி தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. அவருடையை தலையும் ஆடிக்கொண்டே இருந்தது. அது மட்டுமில்லாம், காலுக்கு கீழே தரை இருக்கும் உணர்ச்சியும் போனதோடு,கயிற்றின் மீது நடப்பதைப் போன்ற உணர்ச்சியும் ஏற்பட்டு மிகவும் சிரமப்பட்டார். நரம்பியல் உரு மாறும் தன்மையை ஆராய்ந்த தொடக்க கால நரம்பியலாளர்களில் Paul Bach-y-Ritaவும் ஒருவர். அவர் தான் அந்தப் பெண்மணிக்கு சிகிச்சை அளித்தார்.
Accelerometer என்னும் முடுக்கமானி, சமநிலையை அளவிடும் ஒரு கருவியாகும். முடுக்கமானியை ஒரு தொப்பியில் பொருத்தினார் பால். முடுக்கமானியை மின்சார சமிக்கைகளை கடத்தும் மின்முனைகளோடு (electrodes) இணைத்தார். அந்த மின்முனைகள் ஒரு பிளாஸ்டிக் பட்டையில் பதிந்து இருக்கும். பிளாஸ்டிக் பட்டையை அந்தப் பெண்மணி நாக்கில் வைத்துக்கொள்ள வேண்டும். முடுக்கமானியும் மின்முனைகளும் ஒரு கணினியோடு இணைக்கப்பட்டிருக்கும். அந்தப் பெண்மணியின் தலை அசைவிற்கு ஏற்ப, கணினி சமநிலை உணர்வை மூளைக்கு அனுப்பும். மின்முனை பட்டையை வாயில் வைத்திருக்கும் போது அந்தப் பெண்மணிக்கு கீழே விழும் உணர்வு ஏற்படவில்லை. அவருடைய தலையும் ஆடவில்லை. மின்முனையை ஒரு மணித் துளிக்கு நாக்கில் வைத்துவிட்டு எடுத்த பிறகு 20 நொடிகளுக்கு கீழே விழும் உணர்வு இல்லாமல் இயல்பாக இருந்தார்.
இந்த பயிற்சி தொடர, அவரால் மூன்று மணி நேரம், 20 மணித் துளிகள் வரை இயல்பாக இருக்க முடிந்தது. பின், நான்கு மாதங்கள் வரை இயல்பாக செயல்பட்டார். கடைசியாக, அவருக்கு அந்தக் கருவிகளை பயன்படுத்த வேண்டிய தேவை இல்லாமல் போனது. அவர் முழுமையாக இயல்பு நிலைக்கு வந்துவிட்டார். Vestibular அமைப்பு சேதமடைந்த போது மூளை சீரற்ற முறையில் சமீக்கைகளை வெளிப்படுத்தி இயல்பான சமீக்கைகளை தடுத்திருக்கிறது என்று பால் விளக்குகிறார். மின்முனை கருவியை வைத்து கொடுக்கப்பட்ட சிகிச்சை, மூளை தசைகளை மீண்டும் இயல்பான சமீக்கைகளை வெளியிட வலுப்படுத்தி இருக்கிறது என்றும் விளக்குகிறார்.
பாலின் தந்தை Pedro Bach-y-Rita ஒரு காட்டலான் மொழி கவிஞர். அவருக்கு 65வது வயதில் பக்கவாதம் (stroke) வந்தது. அவருடைய முகமும்,பாதி உடம்பும் செயல் இழந்தது. பாலின் சகோதரர் ஜார்ஜ் அப்போது மருத்துவ மாணவராக இருந்தார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தந்தைக்கு ஜார்ஜ், குழந்தைகளுக்கு பயிற்சி கொடுப்பதைப் போல் தவழ்வதற்கு பயிற்சி கொடுத்தார். பின் தரையில் காசுகளை பரப்பி வைத்து, பலவீனமான கையை வைத்து காசுகளை எடுக்குமாறு தந்தைக்கு பயிற்சியளித்தார். இத்தகைய பயிற்சிகளை தினமும் சில மணி நேரங்களுக்கு செய்ய வைத்தார் ஜார்ஜ். அதன் பயனாக அவர்களின் தந்தை மீண்டும் நடக்கத் தொடங்கினார். பின்னர் பேசவும் தொடங்கியதோடு, தனது 68ஆம் வயதில் நியு யார்க்கில் இருக்கும் City Collegeல் ஆசிரியராக பணியாற்றத் தொடங்கினார். Pedro 72வது வயதில் இறந்த போது அவரின் மூளையை பாலும், மருத்துவர் Mary Jane Aguilarரும் பரிசோதித்தார்கள். மூளையின் தண்டில் பெரிய காயம் இருந்ததை கண்டார்கள். உடலின் அசைவுகளை கட்டுப்படுத்தும் பகுதியான cortexசும் சேதமடைந்து இருந்ததை பார்த்தார்கள். வியக்க வைக்கும் வகையில் அந்தக் காயம் ஆறாமலேயே இருந்தது. இதன் மூலம், ஜார்ஜ் தங்களின் தந்தைக்கு கொடுத்த பயிற்சிகளினால் மூளை தானாக சீரமைத்துக் கொண்டு, ஏழு ஆண்டுகளுக்கு இயல்பாக செயல்பட்டு வந்ததை புரிந்து கொண்டார் பால்.
கற்பனை எண்ணங்கள் மூளையின் அமைப்பை மாற்றும் என்னும் வியக்க வைக்கும் உண்மையைப் பற்றிய ஒரு அத்தியாயம் இந்த புத்தகத்தில் உள்ளது. யூத கணினி நிபுணரும் மனித உரிமை போராளியுமான Anatoly Sharansky ஒரு உளவாளி என்று தவறாக குற்றம் சுமத்தப்பட்டு சோவியத்தில் ஒன்பது வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை நானூறு நாட்களுக்கு தனிமைச் சிறையிலும் அடைத்தார்கள். பொதுவாக,தனிமைச் சிறையில் இருப்பவர்களின் மனநிலை சீர்குழைந்துவிடும். தனிமையை விரட்ட மாதக் கணக்காக மனதிலேயே சதுரங்கம் விளையாடினார் Sharansky. Sharansky சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டப் பின் இஸ்ரேலின் அமைச்சரானார். ஒரு முறை, உலகின் சிறந்த சதுரங்க ஆட்ட வீரரான காரி காஸ்பரொவ் இஸ்ரேலிய பிரதமர் மற்றும் அமைச்சர்களுடன் சதுரங்கம் விளையாடினார். அந்த ஆட்டங்களில் காஸ்பரொவ் எல்லோரையும் வென்றார், Sharanskyயை தவிர.
இந்த புத்தகத்தில் கணினி நிரல்கள் மற்றும் பொருட்களை எடுப்பது மற்றும் கைகளை அசைக்கும் எளிய பயிற்சிகளின் மூலம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், கண், காது போன்ற புலன்கள் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பு நிலையை அடைவதைப் பற்றி மருத்துவர் Doidge அருமையாக விளக்கியுள்ளார். கணினி நிரல்களை வைத்து முதிவர்கள் தங்களின் புலன்களை பலப்படுத்திக் கொண்டத்தைப் பற்றியும் எழுதியிருக்கிறார். மூளையைத் தூண்டும் பயிற்சிகளால் ஆல்சைமர் (Alzheimer) நோய் வருவதை குறைக்கலாம் என்றும் இசைக் கருவிகள் வாசிப்பது, பலகை விளையாட்டுகள் (board games), புத்தகம் வாசிப்பு பழக்கம் மற்றும் நடனமாடுவது மூலம் மறதி நோய் (dementia) வருவதை குறைக்கலாம் என்றும் கூறியிருக்கிறார். மூளை வலுவாக இருக்க புதிய திறன்களை கற்றுக் கொள்ளவேண்டும் என்று வலியுருத்துகிறார். வேலும் வியக்கவைக்கும் பல ஆராய்ச்சி செய்திகள் இந்த புத்தகத்தில் இருக்கின்றன. அனைவரும் இந்த புத்தகத்தை வாசிக்க பரிந்துரைக்கின்றேன்.
Comments
Post a Comment