- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
உலகின் மிகப்பெரிய உயிரினம் நீலத் திமிங்கலம் அல்ல. உண்மையில் நமது பூமியின் மிகப்பெரிய உயிரினம் ஒரு பூஞ்சைக் காளான் தான். அந்த பூஞ்சை அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தில் கிழக்கே இருக்கும் நீல மலைத் தொடரில் வாழ்கிறது. அதை பொதுவாக ‘தேன் காளான்’என்று அழைக்கிறார்கள். அதன் அறிவியல் பெயர் Armillaria ostoyae. வழக்கமான காளான்களைப் போல் இதற்கும் குடை வடிவ உறுப்பு இருக்கிறது. செடிகளின் வேரைப் போல் இந்த பூஞ்சைக்கும் வேர் அமைப்பு (rhizomorphs) தரைக்கு அடியில் இருக்கிறது. ரொட்டி அல்லது வடை கெட்டுப் போனால் பூஞ்சைகள் வளர்ந்திருப்பதை கவனித்து இருப்போம். அந்த பூஞ்சைகள் நூல் போல் இருப்பதையும் பார்த்திருப்போம். அதே வேர் போன்ற அமைப்பு தான் இந்த Armillaria பூஞ்சையிலும் இருக்கிறது. ஆனால் அது காலணிகளை கட்டும் கயிற்றைப் (shoe lace) போல் தடிமனாக இருக்கும். Armillaria பூஞ்சையின் வேர் அமைப்பு 3.4 சதுர மைல்களுக்கு மேல் பரவி இருக்கிறது. அதனால் தான் இது உலகின் மிகப்பெரிய உயிரனம் என்று கருதப்படுகிறது. இந்த வேர் அமைப்பை வைத்து தான் பூஞ்சை உணவை தேடிக்கொள்ளும். நாம் வணிக அடிப்படையில் பயன்படுத்தும் ஊசியிலை மரங்களை இந்த பூஞ்சை தாக்கி நோய் பரப்பும். இந்த பூஞ்சையின் வயது 2,400 முதல் 8,650 ஆண்டுகள் வரை இருக்கலாம் என்று கணக்கிட்டு இருக்கிறார்கள்.
![]() |
(Armillaria ostoyae - விக்கிப்பீடியா) |
1980களில் கனடா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு Armillaria பேரினத்தை (genus) சார்ந்த இன்னொரு பெரிய பூஞ்சையை கண்டுபிடித்தார்கள். அதன் அறிவியல் பெயர் Armillaria gallica. அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் இருக்கும் மேல் மூவலந்தீவில் (Upper Peninsula of Michigan) அதை கண்டுபிடித்தார்கள். அப்போது அந்த பூஞ்சை 37 எக்டேர் (hectare) தூரம் பரவி இருந்தது. அதன் எடை 105 கிலோவிற்கும் கூடுதலாக இருந்தது. அதன் வயது 1,500 என்று கணக்கிட்டு இருந்தார்கள். இந்த இனத்தின் பூஞ்சைகள் வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஏசியாவில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. அண்மையில்,அதே விஞ்ஞானிகள் குழு மீண்டும் அந்த இடத்திற்கு சென்று, மேற்கொண்டு ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். பூஞ்சையின் வளர்ச்சியை மறுபடியும் கணக்கிட்டு, அது 2,500 ஆண்டுகள் பழமையானது என்று அறிவித்து இருக்கிறார்கள். அதோடு, பூஞ்சையின் எடை முன்பு இருந்ததை விட இப்போது நான்கு மடங்குகள் அதிகரித்து இருக்கிறது (4 x 105 கிலோ) என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
![]() |
(Armillaria mellea - விக்கிப்பீடியா) |
விஞ்ஞானிகள் அந்த பூஞ்சையில் இருந்து 245 மாதிரிகளை (samples) எடுத்து ஆராய்ந்து இருக்கிறார்கள். குறிப்பாக அதில் இருந்து மரபணுவை பிரித்து எடுத்து ஆராய்ந்து இருக்கிறார்கள். ஆய்வின் முடிவில், பல இடங்களில் இருந்து எடுத்த மாதிரிகள் எல்லாம் ஒரே பூஞ்சையை சேர்ந்தது தான் என்பதை உறுதி செய்து இருக்கிறார்கள். அந்த பூஞ்சையில் மரபணு மாற்றங்கள் (mutations) மிகவும் குறைவாக நடப்பதையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். பூஞ்சை அந்த சுற்றுச்சூழலோடு நன்றாக ஒன்றி வாழ்வதை இது உணர்த்துகிறது. A.gallica பூஞ்சை இறந்த மரங்களை உண்டும், உயிருள்ள மரங்களை தாக்கியும் வாழும். இறந்த மரங்களை மக்கிப் போக செய்வதால், இந்த பூஞ்சையும், பிற பாக்டீரியாக்களும் சுற்றுச்சூழல் நலமுடன் இருக்க உதவுகின்றன.
![]() |
(Armillaria gallica - விக்கிப்பீடியா) |
Comments
Post a Comment